தொழுகையின் முக்கியத்துவம்வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று கலிமா ஷஹாதா எனும் உறுதிமொழி கூறிய பின்பு, ஒருவர் மீது அல்லாஹ் விதித்துள்ள மிகவும் முக்கியமான கடமை தொழுகையாகும். இஸ்லாமிய அடிப்படைத் தூண்களில் மிகவும் முக்கியமான தூணாகவும், இரண்டாவது தூணாகவும் தொழுகை உள்ளது. அல்லாஹ் நமக்கு பல வகையான வணக்கங்களைக் கடமையாக்கியுள்ளான். தினசரி தவறாமல் நிறைவேற்ற வேண்டிய வணக்கம்தான் தொழுகை. இது நம்மை நேரான பாதையில் வழிநடத்துவதுடன், நம்மைப் படைத்தவனுக்குப் பிடிக்காத விஷயங்களைச் செய்வதிலிருந்து நம்மைத் தடுக்கவும் செய்கிறது.
ஒரு வணக்கசாலி தன்னைப் படைத்தவனுக்கு முன்பு பணிவைக் காட்டுவதற்கு தொழுகை ஒரு வாய்ப்பாகும். அவனுக்கு மாறுசெய்த விஷயங்களில் அந்த அடியார் அவனிடம் மன்னிப்புத் தேடிக்கொள்கிறார்.
நமது நபியவர்களுக்கு மிகவும் விருப்பமான செயல்களில் ஒன்று தொழுகையாகும். ஒரு விசுவாசி இதன் மூலம் தம்முடைய இறைவனிடம் உரையாடுகிற வாய்ப்பைப் பெறுகிறார். தம்முடைய ஆசைகளை அவனிடம் கோரிக்கையாக முன்வைக்கிறார்.
குர்ஆன்நிச்சயமாக தொழுகையானது மானக்கேடான விஷயங்களை விட்டும், தீமைகளை விட்டும் தடுக்கிறது. (அல்குர்ஆன் 29:45)
நபிமொழிகள்அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களிடம் மறுமை நாளில் முதலாவதாக தொழுகை பற்றியே விசாரணை செய்யப்படும். இது குறித்த நபிமொழியின் கருத்து இதோ: மறுமை நாளில் ஓர் அடியார் முதலாவதாக தொழுகை குறித்தே விசாரிக்கப்படுவார். அதில் அவருடையது சரியாக இருந்தால், பிறகு மற்ற செயல்பாடுகளில் அவருடையவை சரியாக இருக்கும். அதில் அவர் சரியில்லை என்றால், அவருடைய மற்ற விஷயங்களும் சரியாக இருக்காது. (சுனன் நசாயீ 467)
உபாதா இப்னு சாமித் (ரலி) கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் தன்னுடைய அடியார்கள் மீது ஐந்து நேரத் தொழுகைகளைக் கடமையாக்கியுள்ளான். யார் அவற்றைச் செயல்படுத்தி, எந்தத் தொழுகையையும் அலட்சியம் செய்து விட்டுவிடாமல் கடைப்பிடிக்கிறாரோ, அவரிடம் மறுமை நாளில் அவரைச் சுவர்க்கத்திற்குள் சேர்ப்பதாக அல்லாஹ் ஓர் உடன்படிக்கை செய்வான். ஆனால் யார் அவற்றைச் செயல்படுத்தியும், ஏதேனும் ஒரு தொழுகையில் அலட்சியம் காட்டினாரோ, அவர் அல்லாஹ்விடம் எந்த உடன்படிக்கையும் இல்லாதவராவார். அவன் நாடினால் அவரை தண்டிப்பான். அவன் நாடினால் அவரை மன்னிக்கவும் செய்வான். (சுனன் இப்னுமாஜா 1465, சுனன் நசாயீ 1:462)
தொழுகையை நாம் அல்லாஹ் நமக்குப் புரிந்த அருட்கொடையாகக் கருத வேண்டும். காரணம், நாம் செய்த பாவங்களிலிருந்து அது நம்மைப் பரிசுத்தப்படுத்துகிறது. அல்லாஹ்விடம் நேரடியாக நமது தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்கவும், நற்செயல்களை நாம் அதிகப்படுத்தவும் நமக்கு வாய்ப்பளிக்கிறது.
நாம் அவனைத் தொழும்போது அவன் நம்மைப் பார்ப்பதாக எண்ண வேண்டும். எல்லா நேரங்களிலும் அவன் நம்மைக் கண்காணிக்கிறான் என்ற நம்பிக்கை அவனுக்கு முன்பு நம்மிடம் உள்ளச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்த நற்செயலை ஒரு வணக்கசாலி பிறரைக் கவருவதற்காக செய்தால், அது அவர் செய்கிற மிகப் பெரிய பாவமாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் ஒருவருடைய (வீட்டு) வாசலில் ஓர் ஆறுஇருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். இந்நிலையில் அவரது உடலில் அழுக்கேதும் இருக்குமா?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் "அவரது உடலில் அழுக்கேதும் இருக்காது'' என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதுதான் ஐந்து நேரத் தொழுகைகளின் நிலையாகும். அதன் மூலம் அல்லாஹ் தவறுகளை அழிக்கிறான்'' என்று கூறினார்கள்.(ஸஹீஹ் அல்புகாரீ 528, ஸஹீஹ் முஸ்லிம் 667)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: ஐந்து நேரத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ ஆகியவை அவற்றுக்கு இடையே உள்ள பாவங்களுக்குப் பரிகாரமாகும். (ஸஹீஹ் முஸ்லிம் 233)
மேலும் காண்கஅல்லாஹ், நபி முஹம்மது, வணக்கங்கள், ஸகாத், நோன்பு, ஹஜ்ஜு, தொழுகை.
ஆதாரக் கட்டுரைhttp://www.supportersoftawheed.co.uk/importanceofsalaaharticle.html
|
.